தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994

  • 0 comments

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994

நமது உரிமையும் ,அரசின் கடமையும்.

ஊரக பகுதிகள்

தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 4.05 கோடிபேர் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவ்வூரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு, தரமான சாலை அமைத்தல் மற்றும் பராமரித்தல், துப்புரவுப் பணிகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் போன்றவற்றை முனைப்புடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொண்டு வருகிறது. மேலும், பள்ளி கட்டிடங்கள் கட்டுதல், அவற்றில் குடிநீர் வசதி, கழிப்பறை போன்ற கட்டமைப்பு வசதிகளை அமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய முக்கிய பணிகளையும் இத்துறை செயல்படுத்தி வருகிறது. ஊரக சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல் மற்றும் பராமரித்தல், பொதுக்கழிப்பிடம், தனிநபர் கழிப்பிடங்களை அமைத்தல் மற்றும் சுகாதாரத்தை பேணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களின் வேலைவாய்ப்பினை உறுதிசெய்து அவர்கள் அரசு நிர்ணயித்த ஊதியத்தினை பெற்றிட வழிவகை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் கிராம மக்களின் வறுமை ஒழிப்பு, கிராமப்புற மகளிர் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரங்களை வலுப்படுத்துதல் போன்றவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படுத்தி வருகின்றது.

மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகள்

73 வது இந்திய அரசியலமைகப் பப்புச் சட்டத்திருத்தம், 1993-ல் கொண்டு வரப்பட்ட பிறகு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ல் இயற்றப்பட்டது. இதன்படி, ஊரகுதிகளில் மூன்றடுக்கு ஊராட்சி முறை அதாவது, அடித்தள அமைப்பாக கிராம ஊராட்சி, இடைநிலையில் வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றடுக்கு ஊராட்சிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து ஊரக வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நோக்கம்

அடிப்படை வசதிகளான குடிநீர் வழங்கல், தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், ஊரக துப்புரவுப் பணிகள், சாலைகள், வடிகால் வசதிகள் மேற்கொள்ளுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை கிராம ஊராட்சியின் முக்கிய பொறுப்பாகும். அனைத்து தனிநபர் பயன்பெறும் திட்டங்களில் பயனாளிகள் கிராம ஊராட்சிகள் மூலமே கண்டறியப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு கிராம சபை ஒப்புதல் அளிக்கிறது. இடைநிலை ஊராட்சியான வட்டார ஊராட்சி வலுவான நிர்வாக அமைப்பும், தொழில்நுட்ப பிரிவும் கொண்டுள்ளதால் ஊரக வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் கிராம ஊராட்சியுடன் இணைந்து பங்காற்றுகிறது. திட்ட ஒருங்கிணைப்பு, ஆய்வு மேற்கொள்ளுதல் ஆலோசனை வழங்குதல் மற்றும் கண்காணிக்கும் அமைப்பாக மாவட்ட ஊராட்சி திகழ்கிறது. மூன்று அடுக்கு ஊராட்சி அமைப்புகள் தங்களின் சட்டப்படியான விருப்பக் கடமைகள் மற்றும் ஆய்வு செய்யும் கடமைகளோடு ஒப்படைக்கப்பட்ட பிற பணிகளையும் செய்து வருகின்றன.

நிர்வாக அமைப்பு

மாநில அளவில்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நிர்வாகத்தை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் செயல்படுத்துகிறார். மத்திய, மாநில அரசுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் செயலாக்கத்தை முறைப்படுத்தி கண்காணித்தல் ஆகியவையவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். தொழில் நுட்பம் சார்ந்த பணிகளில் தலைமைப் பொறியாளர் அதிகாரம் கொண்ட ஒரு கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் செயல்படும் தொழில்நுட்ப பிரிவு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு உதவி புரிந்து வருகிறது. தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர், மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பாவார். கிராமப்புற ஏழை மக்களை ஆற்றல்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் திட்ட இயக்குநர், புது வாழ்வு திட்டம் தலைமையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், வாழ்வாதாரத் திட்டங்களை செயல்படுத்தவும் திட்ட இயக்குநர் தலைமையில் ஒரு அலகு செயல்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில்

மாவட்ட ஆட்சித் தலைவர் மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் ஆய்வாளராக செயல்படுகிறார். மாவட்டத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு மாவட்ட ஆட்சியரே தலைவராவார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் திட்ட இயக்குநர், திட்டப் பணிகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியருக்கு உதவிபுரிகிறார். ஒவ்வொரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலும், நிர்வாக பொறியாளர் தலைமையில் ஒரு பொறியியல் பிரிவு இயங்கி வருகிறது. உதவி இயக்குநர் நிலையிலான ஒரு செயலாளர், மாவட்ட ஊராட்சியில் பணிபுரிகிறார். அத்துடன், இவர் பதவிவழி மாவட்ட திட்டக் குழுவின் செயலாளராகவும் உள்ளார். மேலும், நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு ஊராட்சி நிர்வாகத்தில் உதவி புரிகின்றனர்.

வட்டார அளவில்

வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) என இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆவார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறார். ஒவ்வொரு வட்டார ஊராட்சியிலும் ஒன்றியப் பொறியாளர் / உதவிப் பொறியாளர், பணிமேற்பார்வையாளர் மற்றும் சாலை ஆய்வாளர் ஆகியோர் தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்கின்றனர். இப்பொறியாளர்களின் செயல்பாடுகள் உட்கோட்ட அளவில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர்களால் கண்காணிக்கப்படுகிறது.

கிராம ஊராட்சி அளவில்

கிராம ஊராட்சித் தலைவரே கிராம ஊராட்சியின் செயல் அலுவலரும் ஆவார். தலைவர் மற்றும் துணைத்தலைவர் அல்லது ஊராட்சிகளின் ஆய்வாளரால் (மாவட்ட ஆட்சித் தலைவர்) நியமிக்கப்படும் கிராம ஊராட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கிராம ஊராட்சி கணக்குகளிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கான காசோலைகளில் ஒப்பம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சித் தலைவருக்கு கிராம ஊராட்சி செயலாளர் நிர்வாகத்தில் உதவி புரிகிறார்.

ஊராட்சி நிர்வாகம்

கிராம ஊராட்சியின் கடமைகள்

மூன்றடுக்கு ஊராட்சிகளிலேயே, அடிப்படை வசதிகளை உருவாக்கி, அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்து செயல்படும் அமைப்பாக, கிராம ஊராட்சிதான் விளங்குகிறது. இந்த அமைப்பு, மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக செயல்படுகிறது.

கட்டாயக் கடமைகள்

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 110ல் கீழ்க்கண்டவற்றை கிராம ஊராட்சிகளின் கட்டாயக் கடமைகளாக வகைப்படுத்தியுள்ளது.

  • கிராம ஊராட்சி சாலைகளை அமைத்தல், அத்தகைய சாலைகளில் பாலங்கள் மற்றும் கல்வெட்டுகள் போன்றவற்றைக் கட்டுதல், தெருக்களை மேம்பாடு செய்தல் மற்றும் அவற்றை அவ்வப்போது பழுதுபார்த்துப் பராமரிப்பு செய்தல்.
  • குடியிருப்புப் பகுதியில், பொதுச் சாலைகள், தெருக்கள், பொதுமக்கள் கூடுமிடங்கள் போன்ற பகுதிகளில் தெரு விளக்குகளை அமைத்துப் பராமரித்தல்.
  • பாதுகாக்கப்பட்ட குடிநீர் போதுமான அளவு கிடைக்க வகை செய்தல். இதற்கென உரிய திட்டங்களை நேரடியாகவோ, ஊராட்சி ஒன்றியங்கள் அல்லது குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாகவோ செயல்படுத்துதல், விசைப்பம்புகள், கைப்பம்புகள், பொதுக் குழாய்கள் போன்றவற்றை நிறுவுதல், வாய்ப்புள்ள இடங்களில் வீட்டு இணைப்பு வழங்குதல் மற்றும் அத்தகைய குடிநீர் திட்டங்களைப் பராமரித்தல்.
  • கிராமப்புறங்களில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தப் பொது கழிப்பிடங்கள் கட்டுதல், பள்ளிகளில் சுகாதார வசதிகளை நிறுவுதல், வீடுகளில் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள மக்களுக்கு உதவி செய்தல், இதன் மூலம் கிராமப்புற சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுத்து தனிநபர் சுகாதார வசதியை மேம்படுத்துதல்.
  • கிராமப்புறங்களில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், குறிப்பாக நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுத்தல், கழிவு நீர்க் கால்வாய்கள் அமைத்து குப்பைகளையும், கழிவுகளையும் தெருக்களில் இருந்து அகற்றுதல், மரங்களை நட்டு சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல்.
  • பொது மக்களின் சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் இடையூறாக உள்ள புதர்கள், முட்செடிகள், பாழுங்கிணறுகள், சுகாதாரக் கேடான குளங்கள் மற்றும் குட்டைகளை அகற்றுதல்.
  • இடுகாடு மற்றும் சுடுகாடு ஆகியவற்றை அமைத்துப் பராமரித்தல்.
  • கிராம நத்தங்களை விரிவுபடுத்துதல் மற்றும் கட்டடங்களை ஒழுங்குபடுத்துதல்.
  • கிராமப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் அரசால் ஒப்படைக்கப்படும் மத்திய, மாநில அரசின் பிற திட்டங்களை செயல்படுத்துதல்.
  • அரசு அவ்வப்போது ஒப்படைக்கும் பிற கடமைகளை ஆற்றுதல்.

விருப்பக் கடமைகள்

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 111-ன் படி பின்வரும் கடமைகளை தேவைக்கேற்பவும், நிதி ஆதாரங்களைக் கணக்கில் கொண்டு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளலாம்.

  • சாலைகளில் இருபுறமும் மரக் கன்றுகளை நட்டுப் பராமரித்தல்.
  • குடியிருப்பு மற்றும் கட்டடங்கள் உள்ள பகுதிகளுக்கு அப்பால் உள்ள சாலைகளிலும் தெரு விளக்குகள் அமைத்துப் பராமரித்தல்.
  • பொது சந்தைகள் அமைத்துப் பராமரித்தல்.
  • உள்ளூர் திருவிழாக்களிலும், சந்தைகளிலும் சுகாதார வசதிகள் செய்தல்.
  • வண்டி நிறுத்துமிடம், பேருந்து நிறுத்துமிடம், கால்நடைத் தொழுவங்கள் ஆகியவற்றைப் பராமரித்தல்.
  • இறைச்சிக் கூடங்கள் அமைத்தல்.
  • பயணிகள் தங்குமிடங்களை அமைத்துப் பராமரித்தல்.
  • படிப்பகங்கள் ஏற்படுத்திப் பராமரித்தல்.
  • வானொலி, தொலைக்காட்சி அறைகள், விளையாட்டுத் திடல்கள், பூங்காக்கள் அமைத்தல்.
  • உடற்பயிற்சி நிலையங்களை அமைத்துப் பராமரித்தல்.
  • முறைசாராக் கல்வி, சமூகக் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி நிலையங்கள் அமைத்து நடத்துதல்.

கிராம ஊராட்சிக் குழுக்கள்

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கீழ்க்கண்ட குழுக்கள் அமைத்து செயல்பட வேண்டும்.

  • நியமனக்குழு
  • வளர்ச்சிக்குழு
  • வேளாண்மைக் குழு
  • பணிகள் குழு
  • கல்விக் குழு

நியமனக் குழு

  • கிராம ஊராட்சியில் ஊராட்சி நிதியில் ஊதியம் பெற அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தேர்வு செய்வது இக்குழுவின் முக்கிய பணி ஆகும். இக்குழுவில் கிராம ஊராட்சித் தலைவரும், தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும் இடம் பெறுவர்.

வளர்ச்சிக் குழு

  • இக்குழுவின் தலைவராக கிராம ஊராட்சியில் உள்ள பெண் உறுப்பினர்களில் ஒருவர் இருப்பார். மேலும் இரண்டு உறுப்பினர்களும் இடம் பெறுவர்.
  • மக்கள் நலம், சுகாதாரம், குடிநீர், சமுதாய சொத்துக்கள் ஆகியவற்றினை பராமரித்தல், தரம் உயர்த்துதல், தொற்று நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு முகாம் அமைத்தல், தடுப்பூசி முகாம்கள் அமைத்தல் ஆகியவை இக்குழுவின் முக்கிய பணிகளாகும்.

வேளாண்மைக் குழு

  • இக்குழுவின் தலைவர், கிராம ஊராட்சியின் உறுப்பினர்களுள் ஒருவராவார். நீர்பாசன ஆதாரங்களில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த விவசாய குழுக்களை ஏற்படுத்துதல், வேளாண்மை, தோட்டக்கலை, பட்டு வளர்ப்பு, பால் பண்ணை, தரிசு நில மேம்பாடு, வறட்சிப் பணி மேம்பாடு, சமூக காடுகள், நில மேலாண்மை மற்றும் மண் அரிப்பு தடுப்பு போன்ற நடவடிக்கைகளில் கிராம ஊராட்சிக்கு உதவுதல் போன்ற முக்கிய பணிகளை இக்குழு மேற்கொள்ளும்.

பணிகள் குழு

  • மத்திய, மாநில அரசுத் திட்டங்களை தரத்துடன் உரிய காலத்தில் நிறைவேற்றவும், கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள உள்ளூர் வள ஆதாரங்களைப் பயன்படுத்தி வளர்ச்சித் திட்டங்களை தயாரிக்கவும், இக்குழு கிராம ஊராட்சிக்கு உதவியாக இருக்கும்.

கல்விக் குழு

  • கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணித்தல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மக்களின் பங்கேற்பினைப் பெறுதல், மக்களிடையே முதியோர் கல்வி, நூலகப் பராமரிப்பு, எழுத்தறிவு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகாம்களை அமைத்தல் ஆகியவை இக்குழுவின் முக்கிய பணிகளாகும்.

கிராம சபை

1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 3ன்படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், அக்கிராம ஊராட்சிப் பகுதியில் வாக்காளர்களாகப் பதிவு செய்த அனைத்து நபர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு கிராம சபை செயல்படும். கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும். பொது மக்கள் நேரடியாக ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்பதால் அடித்தள ஜனநாயகத்திற்கு வலுவூட்டப்படுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் திட்டமிடுவதிலும், வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதிலும், பொதுமக்களின் ஒட்டுமொத்தத் திறமை மற்றும் அனுபவம் உதவி செய்கிறது. கிராம ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றத்தை கிராம சபைக் கூட்டத்தில் சமூகத் தணிக்கைக்கு உட்படுத்துவதன் மூலம் வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்படுகிறது.

  • கிராம ஊராட்சிகள், ஒரு ஆண்டில் பின்வரும் நாட்களில், குறிப்பாக ஜனவரி  26, மே  1, ஆகஸ்ட்  15, மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டத்தினை நடத்த வேண்டும். தேவையின் அடிப்படையில், சிறப்பு கிராம சபைக் கூட்டங்களை ஊராட்சிகளின் ஆய்வாளர்(மாவட்ட ஆட்சித் தலைவர்) அனுமதி பெற்று நடத்தலாம்.
  • தகுதி வாய்ந்த அனைத்து வாக்காளர்களும் கிராம சபையின் உறுப்பினர்களாவர்.
  • விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப் பொருள்கள், கிராம ஊராட்சிகளால் முடிவு செய்யப்படும்.
  • கிராம சபைக் கூட்டம் குறித்தான அறிவிப்பு குறைந்த பட்சம் ஒருவாரத்திற்கு முன்பாக வெளியிட வேண்டும்.
  • கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு மக்கள் தொகை அடிப்படையில் கீழ்க்கண்டவாறு குறைவெண் வரம்பு இருக்க வேண்டும்.
மக்கட் தொகை குறைவெண் வரம்பு
500 வரை 50
501 முதல் 3000 வரை 100
3001 முதல் 10000 வரை 200
10001க்கு மேல் 300

மேற்கண்ட குறைவெண் வரம்பில் மகளிர் 3ல் ஒரு பங்கு இருக்க வேண்டும். அந்த கிராம ஊராட்சியின் மொத்த மக்கள் தொகையில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் விகிதாச்சாரம் எதுவோ, அதே விகிதாச்சாரத்தில் ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கு குறைவெண் வரம்பு இருக்க வேண்டும்.

  • கிராம ஊராட்சித் தலைவர், கிராம சபைக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார்.

கிராம சபையின் கடமைகள்

  • கிராம ஊராட்சியின் ஆண்டு வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல்.
  • தனி நபர் பயன்பெறும் திட்டங்களுக்கான பயனாளிகள் பட்டியலுக்கு அங்கீகாரம் அளித்தல் மற்றும் சமுதாய சொத்துக்களை ஏற்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு அங்கீகாரம் அளித்தல்.
  • இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற திட்டங்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை ஆய்வு செய்தல்.
  • கிராம ஊராட்சிகளால் நிறைவேற்றப்படும் பணிகளின் தரத்தை சமூக மற்றும் தொழில் நுட்ப தணிக்கை மூலம் கண்காணித்தல் மற்றும் கணிப்பாய்வு செய்தல்.
  • கிராம ஊராட்சிக்கான ஆண்டுத் தணிக்கை அறிக்கை மற்றும் கணக்குகளை பரிசீலித்தல்.
  • சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்.
  • கிராம சபை, கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், திட்டச் செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு அறிக்கைகளைத் தணிக்கை செய்திடும் சமூகத் தணிக்கை அமைப்பாகவும் செயல்படும்.

பொது மக்கள் பங்களிப்பு

  • கிராம ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள்கிராம சபையில் கலந்து கொண்டு ஊராட்சி தொடர்பாக தங்களின் கருத்துகளை எடுத்துரைக்கலாம்.
  • கிராம ஊராட்சியின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் அளித்தல் அல்லது குறைகளைத் தெரிவிக்கலாம்.
  • பயனாளிகள் தொடர்பான திட்டங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள உரிய அறிவுரைகளை வழங்கலாம்.
  • கிராம ஊராட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் மீது தங்களின் கருத்துக்களைத் தெரிவிப்பதுடன் கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக தங்களது முழு ஒத்துழைப்பையும் அளிக்கலாம்.

தொகுப்பறிக்கை

கிராம சபையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான அறிக்கையினை, தீர்மான நகலுடன் கிராம ஊராட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் / ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு மூன்று நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்கான குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்குதல்

1. கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தல், கிராம ஊராட்சியின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.

2. கிராமப் பகுதிகளில் கைப்பம்புகள், பொதுக் குடிநீர்க் குழாய்கள் மற்றும் வீட்டு இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

3. கிராம ஊராட்சியில் உள்ள குடிநீர் ஆதாரங்களின் அடிப்படையில் வீடுகளுக்கான குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. கிராம ஊராட்சி, குடிநீர் ஆதாரம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அறிக்கையின் அடிப்படையில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கிராம ஊராட்சியின் ஒப்புதல் பெறவேண்டும்.

5. கிராமப் பகுதியில் வசிப்போர், வீடுகளுக்கான குடிநீர் குழாய் இணைப்பு தேவைப்படின் கிராம ஊராட்சியிடம் எழுத்து மூலம் விண்ணப்பத்திட வேண்டும்.

6. வீட்டுக்கான குடிநீர் குழாய் இணைப்பிற்காக குறைந்தபட்சம் ரூ.1,000/- முன் வைப்புத் தொகையினை வீட்டின் உரிமையாளர் கிராம ஊராட்சியிடம் செலுத்திடவேண்டும்.

7. அனுமதிக்கப்பட்ட  பரிமாணத்தில், குடிநீர்க் குழாயினை வீட்டின் உரிமையாளரே, அவரது சொந்த செலவில்அமைத்துக் கொள்ள வேண்டும்.

8. ஒவ்வொரு வீட்டுக் குழாய் இணைப்பிற்கும் மாதாந்திர குடிநீர் கட்டணமாக ரூ.30/-க்கு குறையாமல் கிராம ஊராட்சிமன்ற தீர்மானத்தின்படி நிர்ணயிக்கப்பட்டு வீட்டின் உரிமையாளர் கிராம ஊராட்சிக்கு செலுத்திட வேண்டும்.

9. வறட்சிக் காலங்களில் குடிநீர் ஆதாரம் குறைவாக இருப்பதாக உணரப்படின், கிராம ஊராட்சி உரிய தீர்மானம் நிறைவேற்றி, வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிகாரம் உள்ளது.

10. வீடுகளுக்கான குடிநீர் குழாய் இணைப்பு அனுமதி கோரி விண்ணப்பித்ததன் பேரில் தகுந்த காரணமின்றி குடிநீர் குழாய் இணைப்பினை கிராம ஊராட்சி வழங்கவில்லையென்றாலோ, தாமதம் என அறியப்பட்டாலோ வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை அணுகி மேல்முறையீடு செய்யலாம்.

கிராம ஊராட்சிப் பகுதிகளில் கட்டட வரைபட அனுமதி வழங்குதல்

  • கிராம ஊராட்சியில் வசிக்கும் ஒருவர், புதிதாக கட்டடம் கட்டவோ, ஏற்கனவே உள்ள கட்டடத்தில் மாற்றம் செய்யவோ கருதினால் பணிகள் தொடங்கும் முன் கிராம ஊராட்சித் தலைவரிடம் உரிய படிவத்தில் முழு விவரங்கள் மற்றும் ஆவணங்களை அனுப்பிட வேண்டும்.
  • கட்டடத்திற்கான வரைபடம், கட்டுமானம் அமையப்போகும் இடத்தின் தன்மை மற்றும் கட்ட உபயோகிக்கும் பொருட்களின் விவரங்களை மூன்று பிரதிகளில் அளிக்க வேண்டும்.
  • கூடுதலாகக் கட்டவோ, மாற்றம் செய்யவோ வேண்டின் அதன் காரணத்தினை அளிக்க வேண்டும்.
  • விண்ணப்பம், வரைபடம், இணைப்புகள் மற்றும் தேவையான இதர ஆவணங்கள் ஆகியவற்றில் விண்ணப்பதாரர் கையொப்பமிட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நில உரிமையாளராக இல்லையெனில், உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று இணைக்க வேண்டும்.
  • வழிபாடு, மதசார்புள்ள கட்டடம் கட்ட வேண்டும் எனில், மாவட்ட ஆட்சித் தலைவரின் முன் அனுமதி பெற வேண்டும்.
  • சுடுகாடு, இடுகாடு போன்றவற்றின் எல்லையிலிருந்து 90 மீட்டர் தூரத்திற்குள் குடியிருப்பு / கட்டடத்தினைக் கட்ட வேண்டுமெனில், அந்த சுடுகாடு/இடுகாடு ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் அனுமதி வழங்கப்படும்.
  • கட்டடங்களில் அணுகக் கூடிய இடங்களிலிருந்து குறைந்த அழுத்த மின்சக்தி கம்பிக்கும் 1.50மீ இடைவெளி பக்கவாட்டிலும், உயர் அழுத்த மின்சக்தி கம்பிகளுக்கு 1.75 மீ  இடைவெளி பக்கவாட்டிலும் இருக்க வேண்டும்.
  • அணுக முடியாத இடங்களில் குறைந்தது 2.5 மீ  இடைவெளி மின்கம்பிகளிலிருந்து செங்குத்தாக இருக்க வேண்டும். அணுகக்கூடிய இடங்களில் குறைந்த 4.5 மீ இடைவெளி மின்கம்பியிலிருந்து செங்குத்தாக இருக்க வேண்டும்.
  • கட்டட விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பின் அனுமதியை ரத்து செய்யும் அதிகாரம் கிராம ஊராட்சிக்கு உண்டு.
  • கிராம ஊராட்சிக்கு மனை ஒப்புதலுடன் கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது:

i) 4 குடியிருப்புகளுக்குள் மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்களுக்கு அனுமதி வழங்குதல்.

ii) 2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டடங்களுக்கு அனுமதி வழங்குதல்.

iii) அனுமதியற்ற மனைப்பிரிவில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ கிராம ஊராட்சியால் அனுமதிக்கப்படமாட்டாது.

iv) குடியிருப்புகளுக்கு 4,000 சதுர அடிகளுக்கு மேலும், வணிக கட்டடங்களுக்கு 2,000 சதுர அடிகளுக்கு மேலும் கட்டட அனுமதி கோரும் நிகழ்வுகளில் கிராம ஊராட்சியின் வழியாக நகர் ஊரமைப்புத் துறை மண்டல துணை இயக்குனரது ஒப்புதல் பெறப்படவேண்டும்.

ஊராட்சி ஒன்றியம்

  • ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும், 5,000 மக்கள் தொகை கொண்ட ஊராட்சி ஒன்றிய வார்டுகளை உள்ளடக்கிய வளர்ச்சி வட்டாரங்களாகும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தலில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
  • வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), ஊராட்சி ஒன்றியக் குழுவின் ஆணையர் ஆவார்.
  • ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் ஏதும் இல்லை.
  • மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி ஒன்றியங்கள் இடைநிலை அமைப்பாக செயல்படுகிறது.

ஊராட்சி ஒன்றியத்தின் கடமைகள்

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 112-ன்படி ஊராட்சி ஒன்றியக் குழு கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

  • மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துதல்.
  • ஊராட்சி ஒன்றிய சாலைகள் என்று வகைப்படுத்தப்பட்ட சாலைகள், அச்சாலைகளில் உள்ள பாலங்கள், சிறுபாலங்கள், தரைப்பாலங்கள் ஆகியவற்றைக் கட்டுதல், பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல்.
  • ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கட்டுதல் மற்றும் பராமரித்தல்.
  • குடிநீர் மற்றும் குளிப்பதற்கான நீர் ஆதாரங்கள் அமைத்தல்.
  • தொற்று நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல்.
  • ஊராட்சி ஒன்றியத்தால் வரையறுக்கப்பட்ட கண்காட்சி மற்றும் விழாக்களை நடத்துதல்.
  • ஊராட்சி ஒன்றிய சந்தைகளை ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல், கடைகள், விற்பனை மையங்கள், தரை மேடை கட்டுதல் மற்றும் பராமரித்தல்.

இதர கடமைகள்

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் உபயோகத்திற்காக பொதுவான இடுகாடு, சுடுகாட்டை அமைத்துப் பராமரிக்கலாம்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் வாழும் மக்களின் தேவைக்காக குடிநீர் மற்றும் குளிப்பதற்கான நீர் ஆதாரங்களை அமைத்தல்.
  • ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பொதுவான இடங்களில் கிராம ஊராட்சிகள் விளக்கு வசதி அமைக்கப்படவில்லையெனில், பொது மக்களின் நலம் மற்றும் பாதுகாப்பிற்காக விளக்கு வசதி அமைத்துத் தரலாம்.
  • இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் சேர்ந்து பொது மருந்தகங்கள் அமைத்துப் பராமரிக்கலாம்.
  • ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள எந்த ஒரு கிராம ஊராட்சியிடமும் ஒப்படைக்க அறிவிக்கை செய்யலாம்.

அதிகாரங்கள்

  • ஊராட்சி ஒன்றியப் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவினங்கள் அனைத்தும் ஊராட்சி ஒன்றிய குழுவின் ஒப்புதலுடனேயே செய்யப்பட வேண்டும்.
  • ஊராட்சி ஒன்றிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியத்தின் அனுமதி பெற்ற பின்னரே திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நீர்ப்பாசன ஆதாரத்தில் குடிமராமத்து வேலைகளை மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து குடிமராமத்து கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்கலாம்.
  • ஊராட்சி ஒன்றிய நீர்ப்பாசன ஆதாரங்களில் மீன் பிடிப்பதற்கான உரிமம் வழங்கலாம்.

 

Share Social

Leave a Reply

WhatsApp chat