தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம்

தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம்

சட்ட விதிமுறை:

ஆணையத்தின் பணிகளாக கீழ்க்கண்டவை சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.

அ. எந்த சட்டத்தின் கீழும் அல்லது சட்டத்தின்படியும் குழந்தைப் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தல் மற்றும் பரிசீலித்தல்.  அவற்றைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைத்தல்: அந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் தொடர்பான அறிக்கைகளை மத்திய அரசுக்கு அளித்தல்.

ஆ. குழந்தைகள், பயங்கரவாதம், வகுப்புக் கலவரம், வன்முறைகள், இயற்கை சீற்றம், வீடுகளில் வன்முறைக்கு ஆளாக்கப்படுதல், எச். ஐ. வி./எய்ட்ஸ், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுதல், துன்புறுத்தப்படுதல், சித்ரவதை மற்றும் சுரண்டல், பாலுணர்வைத் தூண்டும் நடவடிக்கைகள் மற்றும் விபச்சாரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுத் தங்கள் உரிமைகளை அனுபவிப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ள அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து, உரிய நிவாரண நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும்.

இ. துயரத்தில் வாழும் குழந்தைகள், அவமானப்படுத்தப்பட்ட குழந்தைகள், குடும்ப ஆதரவு இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறைக் கைதிகளின் குழந்தைகள் தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்து உரிய நிவாரண நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்.

ஈ. சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே குழந்தை உரிமைகள் குறித்த விழிப்புணர்வு குறித்த விஷய ஞானத்தைப் பரப்புதல் மற்றும் இந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தற்போது நடைமுறையிலுள்ள வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புதல்.

உ. சிறுவர் சீர்திருத்த இல்லங்கள் அல்லது மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் அல்லது வேறு எந்த அரசு அமைப்புகளாலும் நடத்தப்படும் சிறுவர் சீர்திருத்த இல்லங்கள் அல்லது குழந்தைகளுக்கான பராமரிப்பு, பாதுகாப்பு இல்லங்களை ஆய்வு செய்தல் அல்லது அதற்கான காரணங்களை  ஆய்வு செய்தல் மற்றும் சீர்திருத்தம் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக குழந்தைகள் காவலில் வைக்கப்பட்டுள்ள, சமூக நல அமைப்புகளால் நடத்தப்படும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தல்.

ஊ. குழந்தை உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தி, அவற்றைத் தடுப்பதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல் மற்றும் கீழ்க்கண்ட விவகாரங்கள் தொடர்பாக தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுத்தல்

1.  குழந்தை உரிமைகளை மறுத்தல் மற்றும் மீறல்.2. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் இருத்தல்.
3. குழந்தைகளின் இன்னல்களைத் தடுப்பதற்கான மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கான அரசின் கொள்கை முடிவுகள், வழிகாட்டி நெறிகள் அல்லது ஆணைகளைச் செயல்படுத்தாத நிலை.
4. அல்லது இப்படிப்பட்ட விஷயங்கள் தொடர்பான பிரச்சினைகளை உரிய அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்லுதல்.
5. உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச அளவிலான மற்ற நடைமுறைகளை செய்தல்; குழந்தை உரிமைகள் தொடர்பான தற்போதைய கொள்கைகள், நிகழ்ச்சிகள், மற்றும் பிற செயல்திட்டங்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்தல் மற்றும் குழந்தைகள் சிறந்த பலன் அடைவதற்காக அந்தத் திட்டங்களையும் கொள்கைகளையும் திறம்பட நடைமுறைப்படுத்துதல்.
6. தற்போதைய சட்டம், கொள்கையை ஆய்வு செய்தல். குழந்தை உரிமைகள் மாநாட்டு பிரகடனத்திற்கு இணங்க அவை நடைமுறைப் படுத்தப்படுவது குறித்து மதிப்பீடு செய்தல். கொள்கையோ அல்லது நடைமுறையோ எந்தவிதத்திலாவது குழந்தைகளை பாதிக்கும் நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்தல்.  உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய சட்டம் குறித்து, ஒரு குழந்தையின் உரிமைகள் தொடர்பான கண்ணோட்டத்தின் அடிப்படையில் கருத்து தெரிவித்தல்.

ஐ. குழந்தைகள் தொடர்பான திட்டங்களில் ஈடுபட்டுள்ள அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளின் செயல்பாட்டில் குழந்தைகளின் கருத்துகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, மதிப்பளித்தல்.

ஒ. குழந்தைகள் உரிமைகள் குறித்தத் தகவல்களைத் திரட்டிப் பரப்புதல்.

ஓ. குழந்தைகள் தொடர்பான புள்ளிவிவரங்களைத் தொகுத்தல் மற்றும் ஆய்வு செய்தல்.

. குழந்தை உரிமைகள் தொடர்பானவற்றை பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு முனைப்புடன் செயல்படுதல்.  ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தல் மற்றும் குழந்தைகளைக் கையாள்வதில் பயிற்சியளித்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துதல்.

ஆணையத்தின் அமைப்பு முறை

மத்திய அரசால் நியமிககப்படும் பின்வருவோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக இடம் பெற்றிருப்பார்கள். இந்த உறுப்பினர்கள் மூன்றாண்டு காலத்திற்குப் பதவி வகிப்பர்.

அ. ஒரு தலைவர் – குழந்தைகள் நலன் மேம்பாட்டில் தலைசிறந்த சேவையாற்றி வரும் புகழ் வாய்ந்த ஒருவர்.
ஆ. ஆறு உறுப்பினர்கள் – கல்வி, குழந்தை உடல் நலன், பராமரிப்பு, மேம்பாடு, சீர்திருத்தப் பள்ளி சிறுவர்களுக்கு நீதி வழங்குதல், புறக்கணிக்கப்பட்ட அல்லது வஞ்சிக்கப்பட்ட குழந்தைகள் அல்லது உடல் குறைபாடு கொண்ட குழந்தைகளின் நலன் காத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தை உளவியல் மற்றும் குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் ஆகிய துறைகளில் அனுபவமும் திறனும் வாய்ந்த புகழ்பெற்றுள்ள நேர்மையானவர்களாக இவர்கள் இருக்க வேண்டும்.
இ.  உறுப்பினர் செயலாளர் – இணைச்செயலாளர் அந்தஸ்துக்கு குறையாதவராக இருக்க வேண்டும்.

அதிகாரங்கள்:

ஒரு வழக்கை விசாரிக்கும் சிவில் நீதி மன்றத்திற்கு உரிய அனைத்து அதிகாரங்களையும் இந்த ஆணையம் பெற்றுள்ளது. குறிப்பாக, பின்வரும் விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரம் கொண்டுள்ளது

அ. இந்தியாவில் எந்தப் பகுதியிலுள்ள யாரை வேண்டுமானாலும் ஆணையத்தின் முன் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டு, அந்த நபர்களிடம் பிரமாணத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தும் அதிகாரம்.
ஆ. எந்த ஆவணத்தையும் கண்டுபிடிக்க, தாக்கல் செய்ய உத்தரவிடும் அதிகாரம்.
இ. தாக்கல் செய்யப்படும் மனுக்களின் அடிப்படையில் சாட்சியங்களைக் கோருதல்.
ஈ  எந்த ஒரு நீதிமன்றத்திலிருந்தும் அரசின் எந்த ஆவணங்களையும் அல்லது அவற்றின் நகல்களையும் கோருதல்.
உ. சாட்சியங்களை விசாரணை நடத்த உத்தரவிடுதல்.

புகார்ப் பதிவு:

குழந்தைகள் உரிமை பறிக்கப்படுதல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் அதிகாரம் ஆணையத்தின் முக்கியமான ஓர் அதிகாரமாகும். குழந்தை உரிமை மீறல்கள் குறித்த முக்கியமான விவகாரங்கள் தொடர்பாக யாரிடமிருந்தும் எந்தப் புகார்களும் பெறப்படாத நிலையில் தாமாகவே முன்வந்து ஒரு வழக்காக ஏற்றுக்கொண்டு ஆணையம் விசாரணை நடத்தும்.  மேலும், தங்கள் உரிமைகளை குழந்தைகள் அனுபவிக்கத் தடையாக இருக்கும் விஷயங்கள் குறித்தும் ஆய்வு செய்யும் அதிகாரத்தை ஆணையம் கொண்டுள்ளது.

அ. அரசியல் அமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள எந்த மொழியில் வேண்டுமானாலும் ஆணையத்திற்குப் புகார் அனுப்பலாம்.
ஆ. இப்படிப்பட்டப் புகார்களை அளிக்க எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
இ. தேவைப்படுவதாகக் கருதப்படும் தருணங்களில் ஆணையம் மேலும் கூடுதல் தகவலையோ / வாக்குமூலத்தையோ கோரக்கூடும்.

புகார் தெரிவிக்கும்போது பின்வரும் விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

அ. புகார்கள் தெளிவாகவும் புரியும்படியாகவும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.  மேம்போக்காகவோ பெயர் குறிப்பிடப்படாமலோ அல்லது கற்பனையான ஒரு பெயரிலோ புகார்களை அளிக்கக் கூடாது.
ஆ. இப்படிப்பட்ட புகார்களுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது.
இ. ஒப்பந்தம் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்ட விவகாரங்கள், சொத்துரிமைச் சிக்கல்கள், போன்ற சிவில் தகராறு தொடர்பான புகார்களாக இருக்கக் கூடாது.
ஈ. பணி விவகாரங்கள் தொடர்பான புகார்களாக இருக்கக் கூடாது.
உ. சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள எந்த ஒரு ஆணையம், நீதிமன்றம் / நடுவர் மன்றம் முன்பு நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான புகார்களாக இருக்கக் கூடாது.
ஊ. ஆணையத்தால், ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பான புகார்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எ. வேறு எந்த விதத்திலும் ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்படாத விஷயங்கள் தொடர்பான புகார்களாக இருக்கக் கூடாது.

ரயில்வே பிளாட்பார குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க:

ரயில்வே பிளாட்பாரத்தில் வசிக்கும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து வழிகாட்டி நெறிகளை வகுப்பதற்கான பல ஆலோசனைக் கூட்டங்களை பல்வேறு குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து என்.சி.பி.சி.ஆர் (NCPCR) நடத்தியது. குழந்தைகளின் போதைப்பொருள் பழக்கம், ரயில்வே போலீஸ் படையினரால் உடல்ரீதியான வன்கொடுமைக்கு ஆளாதல், வசிப்பிடம் இல்லாமை, பெற்றோர்களை அடையாளம் காணுதல் மற்றும் மறுவாழ்வுப் பிரச்சினைகள், மருத்துவ வசதி கிடைக்காத நிலை, ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் போன்றவற்றால் பாதிக்கப்படுதல் இவற்றைக் குறித்து என்சிபிசிஆர் உறுப்பினர் சந்தியா பஜாஜ் தலைமையில் விவாதிக்கப்பட்டன.

கடந்த வருடம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 25 தன்னார்வ அமைப்புகள் மற்றும் ரயில்வே பிளாட்பார குழந்தைகளும் பங்குபெற்ற கூட்டங்கள் நடைபெற்றன. ஸாத்தி, அனுபவ், பிராஜெக்ட் கன்சர்ன் இன்டர்நேஷனல், டெல்லி பிரதர்ஹுட் சொசைட்டி, சேதனா, சலாம் பாலக் ட்ரஸ்ட், ஆக்சன் எய்ட், ஹ்யூமன் லா நெட்வொர்க், சைல்ட்லைன் இந்தியா ஃபவுன்டேஷன் மற்றும் சைல்ட் ரைட் ஃபோரம் ஆகிய தன்னார்வு அமைப்புகளும் இதில் அடங்கும்.

இந்தக் கூட்டங்களில் பல ஆலோசனைகள் (கீழே உள்ளன) தெரிவிக்கப்பட்டன. ரயில்வே பிளாட்பாரங்களில் வசிக்கும் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து நடக்கவிருக்கும் தேசியப் பயிலரங்கில் இந்த ஆலோசனைகள் பகிர்ந்துகொள்ளப்படும் என்று பஜாஜ் கூறினார். எனவே, இந்த வழிகாட்டு நெறிகள் ரயில்வே அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

ஆலோசனைகள்:

  • குழந்தைகள் தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்துக்கொண்டு வருவதால், வெள்ளை திரவ (white fluid) விற்பனையை ரயில்வே பிளாட்பாரங்களில் தடைசெய்தல்.
  • ரயில்வே பிளாட்பராக் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது தங்களுடைய பொறுப்பாக ரயில்வே அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • உடல் ரீதியாகவும், பாலின ரீதியாகவும் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு உடனடியான மருத்துவ வசதி செய்துதரப்பட வேண்டும்.
  • ரயில்வே பிளாட்பாரங்களில் வசிக்கும் குழந்தைகள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும்.
  • ரயில்வே நிலையத்திலிருக்கும் எல்லா பிளாஸ்டிக் குப்பைகளையும் அகற்றும் குப்பைக்காரக் குழந்தைகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள்தான் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறார்கள்.
  • ரயில்வே போலீஸ் படையினர், ரயில்வே பிளாட்பாரக் குழந்தைகளைக் காக்கும் தன்னார்வ தொண்டு அமைப்பினருக்கு அடையாள அட்டைகளை வழங்கவேண்டும்.
  • என்சிபிசிஆர் ரயில்வே போலீஸ் படையினருக்கு இந்தக் குழந்தைகளின் உரிமைகள் குறித்த தகவல்கள் அடங்கிய சுற்றறிக்கைகளை வழங்க வேண்டும்.
  • வழி தவறிவிட்ட மற்றும் காணாமல் போன பிளாட்பாரக் குழந்தைகளைப் பற்றிப் புகார்களைத் தெரிவிக்க ஒருங்கிணைந்த அதிகார  மையம் இருக்க வேண்டும்.
  • என்சிபிசிஆர் ஒருங்கிணைந்த தகவல் திரட்டு முறையைப் (டேடா பேஸ்) பராமரிக்க வேண்டும்.
  • வழி தவறிவிட்ட, காணாமல் போன, வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளைப் பற்றி புகார்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உடனடியான 10 நிமிடங்களுக்குள் முடிந்துவிடக்கூடிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
  • தொடக்க நிலையிலேயே தலையிடுவதற்கான முறையை என்சிபிசிஆர் ஏற்படுத்த வேண்டும்.
  • குழந்தைகள் நலக் கமிட்டி ஒன்று ரயில்வே நிலையத்தின் அருகில் அமைக்கப்பட வேண்டும்.
  • இவர்களுக்கான காப்பிடங்கள் சிறைச்சாலையின் தோற்றத்தில் அமைக்கப்படக் கூடாது. சுகாதார முறைகள் மற்றும் மறுவாழ்வு பெற்ற குழந்தைகளை நடத்துவது போன்றவை வீட்டைப் போலவே இருக்க வேண்டும்.
  • இப்படிப்பட்ட காப்பிடங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதையும் ஒருங்கிணைந்த கணக்கு சரிபார்த்தல் மூலம் கணக்கு வழக்குகளையும் அவ்வப்போது கண்காணிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
  • வழி தவறிவிட்ட, காணாமல் போன மற்றும் வன்கொடுமைகளுக்கு ஆளான ரயில்வே பிளாட்பாரக் குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையங்கள் மற்றும் காப்பிடங்களில் பணிபுரியும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் கணக்கு வழக்குகள் சரிபா£ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள என்சிபிசிஆர் ஒருங்கிணைந்த கணக்கு சரிபார்த்தல் நடவடிக்கை முறையை ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளின் உரிமை மசோதா

குழந்தைகளின் உரிமை மசோதா:

18 வயதிற்குக் குறைவான அனைவரும் குழந்தைகளே.  குழந்தைகளை வளர்த்து முன்னேற்றுவது பெற்றோர்களின் முக்கியமான கடமை. குழந்தைகளின் உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்து, அவற்றை உறுதிப்படுத்துவது அரசின் கடமை.

கவுரவம் மற்றும் உரிமைக் குரல்:

  • எனது உரிமைகள் குறித்து அறிந்துகொள்ளும் உரிமை எனக்குண்டு. (அரசியலமைப்புச் சட்ட 42 ஆவது பிரிவு)
  • நான் யாராக இருந்ததாலும், எங்கு வசித்தாலும், எனது பெற்றோர் என்ன வேலையில், தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், நான் எந்த மொழி பேசினாலும், நான் எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும், நான் சிறுவனாக அல்லது சிறுமியாக இருந்தாலும், நான் எந்தக் கலாசாரத்தைச் சார்ந்திருந்தாலும், எனது உடலில் குறைபாடுகள் இருந்தாலும், நான் ஏழையாகவோ அல்லது செல்வச் செழிப்போடு இருந்தாலும், ஒரு குழந்தைக்கான அனைத்து உரிமைகள் எனக்கு உண்டு. எந்த அடிப்படையிலும் நான் பாரபட்சமாக நடத்தப்படக் கூடாது. இதை அறிந்துகொள்ளும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. (அரசியலமைப்புச் சட்ட 2 வது பிரிவு)
  • எனது கருத்துகளை சுதந்திரமாக வெளியிட எனக்கு உரிமை உண்டு. எனது கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். பிறர் கருத்துகளை கவனித்துக் கேட்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. (அரசியலமைப்புச் சட்ட 12,13 வது பிரிவுகள் )
  • தவறுகள் இழைக்க எனக்கு உரிமை உண்டு. நமது தவறுகளிலிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியும் என்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. (அரசியலமைப்புச் சட்ட 28 வது பிரிவு)
  • எனது திறன்கள், எப்படிப்பட்டவையாக இருந்தாலும் அனைத்திலும் இடம்பெறும் உரிமை எனக்குண்டு. வேறுபட்ட நிலையில் இருப்பவர்களுக்கு பேதம் பார்க்காமல் மதிப்பளிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. (அரசியலமைப்புச் சட்ட 23 வது பிரிவு)

மேம்பாடு

  • சிறந்த கல்வி பெறும் உரிமை எனக்கு உண்டு. அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிக்குச் செல்ல ஊக்கமளிப்பது அனைவரின் பொறுப்பு. (அரசியலமைப்புச் சட்ட 23,28,29 வது பிரிவுகள்)
  • சிறந்த முறையில் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் உரிமை எனக்குண்டு. அடிப்படை ஆரோக்கியம் பேணுதல் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறுவதில் மற்றவர்களுக்கு உதவும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. (அரசியலமைப்புச் சட்ட 24 வது பிரிவு)
  • போதுமான உணவு பெறும் உரிமை எனக்கு உண்டு. மக்களின் பட்டினியைப் போக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. (அரசியலமைப்புச் சட்ட 24 வது பிரிவு)
  • தூய்மையான சுற்றுச்சூழலில் வாழும் உரிமை எனக்குண்டு. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. (அரசியலமைப்புச் சட்ட 29 வது பிரிவு)
  • விளையாடவும் ஓய்வெடுக்கவும் எனக்கு உரிமை உண்டு. (அரசியலமைப்புச் சட்டம் 31ஆம் பிரிவு)

பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு

  • அன்பைப் பெறவும் துன்புறுத்தப்படுதல் மற்றும் பல்வேறு கொடுமைகளிலிருந்து பாதுகாக்கப்படவும் எனக்கு உரிமை உண்டு. மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும் அக்கறை காட்டவும் எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. (அரசியலமைப்புச் சட்ட 19 வது பிரிவு)
  • ஒரு குடும்பத்தில், பாதுகாப்பான, சவுகரியமான ஒரு வீட்டில் வாழும் உரிமை எனக்கு உண்டு. அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு குடும்பமும் வீடும் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. (அரசியலமைப்புச் சட்ட 9, 27 வது பிரிவுகள்)
  • எனது பாரம்பரிய நம்பிக்கைகள் குறித்துப் பெருமிதம் கொள்ள எனக்கு உரிமை உண்டு. மற்றவர்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. (அரசியல் அமைப்புச் சட்ட 29, 30வது பிரிவுகள்)
  • வன்முறைக்கும் துன்புறுத்தும் தண்டனைக்கும் (வாய்மொழியாக, உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக) ஆளாகாமல் வாழும் உரிமை எனக்கு உண்டு. மற்றவர்களை வன்முறைக் கொடுமைகளுக்கு ஆளாக்காமல் இருக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. (அரசியல் அமைப்புச் சட்ட 2, 28,37,39 வது பிரிவுகள்)
  • பொருளாதார ரீதியிலான சுரண்டல்கள் மற்றும் பாலியல் ரீதியிலான சுரண்டல்களிலிருந்துப் பாதுகாக்கப்படும் உரிமை எனக்கு உண்டு. எந்தக் குழந்தையும் வேலைக்குச் செல்லும்படி நிர்பந்திக்கப்படாமல் இருப்பதையும் சுதந்தரமான, பாதுகாப்பான சூழ்நிலையை அமைத்துத் தருவதை உறுதி செய்வது அனைவரின் கடமையாகும். (அரசியல் அமைப்புச் சட்ட 32, 34 வது பிரிவுகள்)
  • அனைத்து விதமான சுரண்டல்களிலிருந்தும் பாதுகாக்கப்படும் உரிமை எனக்கு உண்டு. எந்த விதத்திலும் மற்றவர்களின் கைபொம்மையாகக் குழந்தைகள் ஆட்டுவிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. (அரசியல் அமைப்புச் சட்ட 36வது பிரிவு)

குழந்தைகள் தொடர்பான அனைத்துத் திட்டங்கள்,நடவடிக்கைகளில் குழந்தைகளுக்குச் சிறந்த பலன்களைக் கிடைக்கச் செய்வதுதான் முதன்மையான,அடிப்படையான நோக்கமாகக் கருதப்பட வேண்டும்.

இந்த அனைத்து உரிமைகளும் பொறுப்புகளும் 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற குழந்தை உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மாநாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் இந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ளன. இந்திய அரசு இந்த ஆவணத்தில் 1992 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டுள்ளது.

குழந்தைகள் உரிமைகளின் முக்கிய பாதுகாவலனாக ஊராட்சிகள்

ஆந்திரபிரதேசத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஸபாத் மண்டலுடைய தலைவராக சின்னசோலிபட் கிராமத்தைச் சேர்ந்த நரசிங்காராவ் இருந்த பொழுது, பள்ளிகள், கல்விக்குப் பயன்படாமல் திருமணங்கள் மற்றும் இதர விழாக்களுக்குப் பயன்படுத்தப்படுவதைக் கவனித்தார். பள்ளிகளை சுத்தம் செய்து, குடி தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, குழந்தைகளுக்கு கல்வி மற்றும் இதர திறமைகளை வளர்த்துக் கொள்ள ராவ் வழி செய்தார். அதைத் தொடர்ந்து, மாதம் ஒரு முறை கிராம கல்விக் குழு கிராமத்தில் உள்ள இளைஞர்களுடன் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்தார். கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களை தத்தம் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வி முறையை கண்காணிக்குமாறு செய்தார்.

தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு செய்த பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் மற்றும் குழந்தைகள்

உரிமைகளுக்கான மாநாட்டில், சில ஊராட்சிகளினுடைய சிறந்த செயல்பாடுகள் பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் கண்காணித்தலில் பஞ்சாயத்துகளின் முக்கிய பங்கு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

பஞ்சாயத்துராஜ் அமைச்சத்தின் கூடுதல் செயலாளராக உள்ள ராஜ்வந்த் சந்த், கிராமப்புற இந்தியாவில் உள்ள 30 கோடி குழந்தைகளுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது என்று மாநாட்டில் எடுத்துரைத்தார். பல மக்கள் அன்றாடம் இரண்டு வேளை உணவுக்குக் கஷ்டப்படும் போது, அவர்களுக்கு தரமான கல்வி கொடுப்பதும் மிகவும் கடினமாக உள்ளது என்றும் கூறினார்.

தற்போது வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையின் படி, இந்தியாவில் 47 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக அவர் தெரிவித்தார்.பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கு முயற்சி எடுக்க வேண்டும்; முன்னேற்றக் காரணிகளான கல்வி, உடல்நலம் மற்றும் குழந்தைக் கடத்தல் குறைப்பு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை பஞ்சாயத்துக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. பஞ்சாயத்துராஜ் மத்திய அமைச்சரான மணிசங்கர் ஐயர், மாநாட்டின் துவக்க உரையில், குழந்தைகள் உரிமைகளுக்கு தகுந்த அமைப்பை ஏற்படுத்துவதற்கு பஞ்சாயத்துகளுக்கு அரசு தற்போது அதிகாரம் அளித்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் குழந்தைகள் உரிமைகளை அமல்படுத்துவதற்கு ஏற்ற செயல்பாடுகள், நிதி மற்றும் அதை நடைமுறைப்படுத்தும் செயல்வீரர்களைக் கண்டறிய மத்திய மாநில அரசுகள் வழி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பஞ்சாயத்து அமைப்புகளில் குழந்தைகள் உரிமைகளை அமல்படுத்துவதற்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளை பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டினார். அண்மையில் நடந்த சந்திப்பில், ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தருவதாக பிரதமர் கூறினார்.

பஞ்சாயத்துகள் குழந்தைகள் உரிமைகளின் பாதுகாவலனாக இருக்க முடியும் என்று கருதி, ஸபாத் மண்டல் கிராம பஞ்சாயத்து சுகாதாரக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக்குழு அங்கன்வாடி, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலைமை, துணைச் செவிலியர்களின் செயல்பாடுகள், தடுப்பு மருந்தீடு நிர்வாகம் மற்றும் வைட்டமின் இணை வகைகள், இதனுடன் தொடர்பான இதர நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடுகிறது. குழந்தைகள் உரிமைகள் பற்றிய செயல்பாடுகள் பஞ்சாயத்துகளின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது என்று ராவ் பெருமையாக கூறினார். ஸபாத் மண்டலில் குழந்தை தொழிலாளி என்பது அறவே கிடையாது என்றும் தெரிவித்தார்.

மேகாலாயாவில் காவல் துறை, நீதி மன்றம் இருந்தும் கூட, கிராமங்களிலிருந்து 132 குழந்தைகள் காணாமல் போனதாக பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் அறிவித்துள்ளன. தற்போது இந்த வழக்குக ளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதை மற்றும் குற்றவியலினுடைய ஆள் கடத்தல் எதிர்ப்பு பிரிவு புலனாய்வு செய்து வருகிறத.

தேசியகுழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் உரிமைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ள 600 கிராம பஞ்சாயத்துக்களில் ராவ் பிரதம உறுப்பினராக இருக்கிறார். இந்த 600 கிராம பஞ்சாயத்துகளும், குழந்தைகள் உரிமைகள் என்னவென்று புரிந்து கொண்டு, அதற்கேற்ப அமைப்புகளை விரிவுபடுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி உறுப்பினர்களை கொண்டு, நாடு முழுவதும் உள்ளகுழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்புக்களை கண்காணித்து வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அவைத் தலைவர் கூறினார்.

குழந்தைகள் உரிமை பிரச்சனைகளில் பஞ்சாயத்துராஜ் அமைப்புகளுக்கு உதவுவதற்கு, பெங்களூர்குழந்தைகள்உரிமை அறக்கட்டளை, ஊரக முன்னேற்றம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையுடன் இணைந்து சிறப்பு கிராம சபைகளை அமைத்துள்ளது. கர்நாடகா பஞ்சாயத்து சட்டத்தின்படி உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் கிராமப் பஞ்சாயத்தை முன்னேற்றுவது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அனைத்து குழந்தைகள் பிரச்சனைகளுக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாக அறக்கட்டளையின் வாசுதேவ் சர்மா கூறுகிறார். உள்ளாட்சி மன்றங்கள் குழந்தைகள் முன்னேற்றத்துக்கு காரணமாக இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிவதாக அவர் கூறினார். பூனேவில் உள்ள சமூக பொருளாதார முன்னேற்ற அறக்கட்டளையின்மூலம்350 பஞ்சாயத்துக்களில் வேலை பார்த்த சூர்யகாந்த் குல்கர்னி, “கிராமப் பஞ்சாயத்துகள் ஏற்கெனவே நல்ல விரிவாக்கம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட செயல்களைச் செய்யக்கூடிய கிராமக் குழுக்களைக் கொண்டிருப்பதால், குழந்தைகள் உரிமைகளுக்கான நடவடிக்கைகளை இந்த அமைப்புகளின் வழியாக செயல்படுத்துவது எளிதாக உள்ளது” என்று கூறினார்.

குழந்தைகள் பிறப்பு பதிவு, திருமண வயது, பள்ளி செல்லும் குழந்தைகள், கல்வியை தொடர முடியாமல் போகும் குழந்தைகளின் விபரங்கள், தடுப்பு மருந்தீடு, சுகாதார ஆய்வறிக்கை அட்டைகள் போன்ற குழந்தைகளின் புள்ளி விபரங்களைச் சேகரித்து, ஆய்வு செய்வதின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு குழந்தைகள் உரிமைகள் பற்றிய பயிற்சியில் தரப்படுகிறது.

குழந்தைகளின் பள்ளி வருகையை கண்காணிப்பது, பள்ளி கட்டமைப்பிற்கான கோரிக்கைகள், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்திரவாத திட்டத்தில் குழந்தைகளை தொழிலாளிகளாக மாற்றாமல் இருப்பது; பள்ளி மதிய உணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களின் மூலமாக ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வது போன்றவற்றில் பஞ்சாயத்துகள் முக்கிய பங்கு வகிக்கிறன. மத்திய பிரதேசத்தின் திக்கம்கார்க் தொகுதியில் உள்ள ஹிரா நகரின் தலைவர் மின்தரம் யாதவ் மாநாட்டில் “குழந்தைகளைப் பாதுகாப்பது பற்றிய உறுதிமொழியை பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் நான் எடுத்துக் கொள்கிறேன். குழந்தைகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து என் கிராமத்தின் எதிர்காலம் இருக்கப் போகிறது” என்று கூறினார். இந்தியாவின் கிராமப்புறத்தில் உள்ள 30 கோடி குழந்தைகளுக்கு, சிறந்த எதிர்காலம் அமைய பஞ்சாயத்துக்கள் மூலம் தேவையான பாதுகாப்பு கிடைக்கவேண்டும்.

மறுவாழ்வு திட்டங்களில் குழந்தைகளின் உரிமைகள் சேர்க்கப்படுதல்:

குழந்தைகளின் தேவை மற்றும் உரிமைகள் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்ட மறு குடியேற்ற தேசியக் கொள்கை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்கான திட்டம் – 2003, தேசிய மறுவாழ்வு கொள்கை – 2006 ஆகிய திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த தேசிய குழந்தைகள்உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. தேசியகுழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய அவைத் தலைவர் சாந்தா சின்ஹா, ஊரக முன்னேற்றத் துறை அமைச்சரான ரகுவன்ஸ் பிரசாத்துக்கு எழுதிய கடிதத்தில், இடமாற்றத்தால் வளர்ச்சித் திட்டங்கள், பேரழிவுகள் மற்றும் முரண்பாடுகளால் எவ்வாறு குழந்தைகளின் நிலைமை மாறியுள்ளது என்பது பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார். பல மறுவாழ்வு திட்டங்கள் குழந்தைகளின் உரிமைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளாததையே இது காட்டுகிறது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் உணவு, சுகாதார வசதிகள் கிடைக்கப் பெறாமல் பட்டினியுடன், ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கின்றனர்; புதிய பள்ளிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் அவர்கள் பகுதியில் எதுவும் செய்யாததால், குழந்தைகள் கட்டாயமாக பள்ளி அமைப்பிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்; குழந்தைகள் தங்கள் அடையாளத்தை காண்பிப்பதில் பிரச்சனை; பள்ளியில் சேர்ப்பதற்கான செயல் முறைகள், மாற்றுச் சான்றிதழ் பெறுவதில் பிரச்சனை, முக்கியமாக அருகில் உள்ள மாநிலங்களுக்கு இடம் பெயரும் குடும்பத்தில் உள்ளகுழந்தைகள் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். பலகுழந்தைகள் போதுமான கவனிப்பு, பாதுகாப்பு இல்லாமல், தங்களுடைய உறவுகளை இழந்து நிற்கின்றனர். மறுவாழ்வுக்கான பாராளுமன்றக் குழுவிற்கு தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம், குழந்தைகள் உரிமைகளின் முக்கியத்துவத்தை வழங்க விரும்புகிறது. மறுவாழ்வுக்கான தேசியக் கொள்கை முகப்புரையில், குடும்பங்கள் இடம்பெயர்வதால் குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி, உடல்நலம் மற்றும் இதர வசதிகளில் அவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் மீதான தாக்கத்தை அளவிடவும், அவர்களின் அனைத்து உரிமைகளையும் ஏற்றுக் கொள்வதற்கும் அழைப்பு விடுக்க வேண்டும். இந்த அழைப்பு பாலினச் சமத்துவத்தோடும், வயது குறித்த தெளிவான வரையறையோடும் இருக்க வேண்டும். இந்த கொள்கையின் படி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பு கவனம் மற்றும் தொடர்ந்த கல்வி அளிப்பதற்கு உத்திரவாதமளிக்க வேண்டும். ஆசிரம பள்ளிகளின் செயல்பாடுகள், விடுதிகள், ஒருங்கிணைந்த சிறார் வளர்ச்சி சேவை மையங்கள் அமைப்பது, படிப்பு உதவித் தொகை பெறுவது, மற்றும் சிறார்களின் இதர உரிமைகளும் ஆணையாக்கப்பட வேண்டும்.

மகன்களைப் போலவே, திருமணமாகாத மகள்களும் அனைத்து உரிமைகளை சரிசமமாக பெற வேண்டும். பள்ளிகள், அங்கன்வாடி மையம், விடுதிகள் நிறுவுவதற்கு போதுமான நிலம் பெற வேண்டும் என்றும் இந்த ஆணையம் கூறியுள்ளது. மேலும், இந்த சேவைகளை செய்வதற்கான பணியாட்கள் நியமிக்கப்பட்டதை பட்டியலிட வேண்டும் என்றும் இந்த ஆணையம் கூறியுள்ளது.

பெண் மற்றும் குழந்தைகளின் துறையையும், சமூக நீதி, தொழிலாளர் மற்றும் மனிதவள மேம்பாடு துறையையும், தேசிய மறுவாழ்வுக் கொள்கை கண்காணிப்பில் சேர்த்துக் கொள்ள இந்த ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. கல்வி, ஊட்டச்சத்து, உடல்நல நிலைகளை கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் சிறார்கள் பட்டியலை ஆய்வின் மூலம் தயார் செய்ய வேண்டும். இதையும் தேசிய மறுவாழ்வுக் கொள்கையில் சேர்க்க வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது. பள்ளிக் கல்வி பற்றிய விபரங்களையும் இந்த ஆய்வில் சேர்க்க வேண்டும். முக்கியமாக சிறார்கள் கல்வி பதிவேடுகளில் எந்த வித தடையுமின்றி கல்வி கற்கிறார்களா என்பதையும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகள், விடுதிகள், ஒருங்கிணைந்த சிறார் வளர்ச்சி திட்ட மையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள், பள்ளிகளை இணைத்தல், மற்றும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல செயல்களை நடைமுறைப்படுத்துவது மறு குடியேற்ற திட்ட நிர்வாகியின் பொறுப்பாகும்.

இடமாற்றம் மற்றும் மறு குடியேற்றத்தினுடைய காலத்தின் போது சிறார்களுக்கு உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படாதவாறு இருக்க வேண்டும். அந்த சமயத்தில் சிறார்கள் பள்ளிக்கு செல்வதற்கு ஏற்ற மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த சிறார் வளர்ச்சி சேவை மையங்களை அமைக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது. சிறார் உரிமைகள் மீறப்படுவதையும், அதற்கான நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு அவ்வப்போது அறிவிக்க வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் நடவடிக்கைகள்:

  • குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு(தடுத்தல் மற்றும் ஒழுங்கு படுத்துதல்) 1986 சட்டதின்படி 15 தொழில்கள் மற்றும் 57 செயல் முறைகளில் (திட்ட பகுதி ‘அ’ மற்றும் பகுதி ‘ஆ’) சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தடுக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை தவறு செய்பவர்களைக் கடுமையாகக் கண்டிப்பதோடு, அவர்கள் மீது சட்டப்படி முறையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அதோடு இச்சட்டத்தின் திட்ட செயல்பாடுகள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என, நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் மூலம் கவனிக்கப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முறையாக விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்.
  • இளையோர் நீதிச் சட்டம் (இளையோர் நீதிக் காப்பு) – 2006 என்பது ஆதரவற்ற, புறக்கணிக்கப்பட்ட சிறார்கள், குழந்தைத் தொழிலாளர்களுக்கு கவனிப்பு, பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் சட்டம் ஆகும்

பாகம் 2 (டி) (ia) கவனிப்பு மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டிய வேலைக்கு அனுப்பப்படும் சிறுவர்களைப் பற்றியது: இதன்படி 18 வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகளாகவே கருதப்படுகிறார்கள். இச்சட்டம் சற்று விரிவானது. குழந்தைத் தொழிலாளர்கள் முறை 14 வயதிற்குட்பட்டவர்களை மட்டுமே வேலைக்கமர்த்துவதைத் தடை செய்கிறது. ஆனால், இளையோர் நீதிச் சட்டம் இதற்கு முரணானது. மேலும் விரிவாகக் கூற வேண்டுமானால் இளையோர் நீதிச் சட்டம் குழந்தைத் தொழிலாளர் முறையில் சேர்க்கப்படாத, இளைஞர்களுக்கும் பாதுகாப்பளிக்கிறது.

சிறார் பாதுகாப்புச் சட்டம் அல்லது ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் 1976 குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீது நடவடிக்கை எடுக்கிறது. பல சிறார்கள் குடும்பச் சுமை காரணமாகவே வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். இவ்வாறு அனுப்பப்படும் குழந்தைகள் தம் வீட்டைப் பிரிந்து, வேறோரிடத்தில் தங்கி வேலை செய்கிறார்கள். தொழிலாளர் மற்றும் வருவாய்த் துறை கண்காணிப்புக்குழு அதிகாரிகள் இச்சட்டத்தைக் கடுமையாக அமலாக்கம் செய்ய வேண்டும். முன்பணம் கொடுத்ததற்கான சான்று ஏதுமின்றி, ஒரு நிறுவனதாரர் ஒரு தொழிலாளியை கடுமையாக நடத்துவதாக (வேலை வாங்குவதாகத்) தெரிந்தால், அந்நபர் மீது நடவடிக்கை எடுக்க இச்சட்டம் அனுமதி அளிக்கிறது. இவ்வாறு நடவடிக்கை எடுக்க, பாதிக்கப்பட்டவருக்கு வயது வரம்பு கிடையாது.

  • அதோடு ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்கு மற்றும் தடுப்புச்) சட்டம் 1970 தரகர்கள் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பெற்று, வேலைக்கு அமர்த்துவோர் மீது நடவடிக்கை எடுக்கிறது. பல நிறுவனங்கள் இவ்வாறு செய்தாலும் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றன அல்லது மன்னிக்கப்படுகின்றன. “குற்றத்தைத் தூண்டுவோர்” என்ற அடிப்படையில் குற்ற வழக்கு பதிவு செய்து தரகர்கள் மூலம் குழந்தைத் தொழிலாளர்களை அமர்த்துபவர்கள் தண்டிக்கப் படவேண்டும்.

மேற்கண்ட அனைத்துச் சட்டங்களும் வேளாண்மை மற்றும் இதர தொழில்களில் சிறார்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்கின்றன. சிறார்களைக் குழுவாகவோ அல்லது தனியாகவோ தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் எந்த ஒரு நிறுவனத்திலும் வேலைக்கு அமர்த்துதல் கூடாது.

எனவே கடுமையான விதியை அமலாக்கம் செய்வதால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும். சிறார்கள் என்போர் குறைந்த ஊதியத்தில் எளிதில் கிடைக்கும் மனிதவளம். மேலும், அவர்கள் அதிக நேரம் வேலை செய்பவர்கள் என்பதாலேயே நிறுவனங்களின் சிறு தொழில்களில் சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இந்த நிறுவனங்களும் தனியார், அரசுத்துறைகள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து சிறார்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என்ற ஒரு பொதுவான கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இதற்கு தேசிய குழந்தைகள்உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர்கள் திட்டமிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சிறுவர்களின் பாதுகாப்பு:

தேசிய குழந்தைகள்உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் பங்குபெறும் சிறார்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. இக்குழுவில் முன்னாள் குழந்தை நட்சத்திரமான சச்சின் பில்கன்கர், அத்மன் பிரகலாத் கக்கர் மற்றும் செய்தித்தாள், மின்னனு ஊடகப் பிரதிநிதிகள் பலரும் உள்ளனர்.

இந்த உறுப்பினர்கள் குழந்தைத் தொழிலாளர்களின் அவலநிலை குறித்தும், சிறார் உரிமைகள் பற்றியும் உண்மை நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மூலம் விவாதிக்கின்றனர். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திரு. சந்தியா பஜாஜ் இவ்வாறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு நல்ல ஒரு சூழலை உருவாக்கித் தர சில வழிமுறைகளைக் கூறியுள்ளார். குழந்தைகள் நாளொன்றுக்கு குறிப்பிட்ட சில மணி நேரம் மற்றும், ஆண்டிற்கு மொத்தம் சில மணி நேரம் என சிறார் பங்கு பெறும் நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட வேண்டும். மேலும், இச்சிறார் மற்றும் அவர் குடும்பத்தினரின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கென ஓர் அமைப்பு ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் உற்பத்தி இடங்களில் சிறார்கள் கொடுமைப்படுத்தப்பட்டால் எடுக்கப்படும் நடவடிக்கைகள், சிறார் உரிமைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் பங்கு பற்றிய வரையறை, சிறார்களுக்கு வழங்கும் ஊதியம் பற்றிய பரிந்துரை( அதாவது அவர்களின் கல்வி பத்திரம் / சான்றிதழ் வழியாக ஊதியம் வழங்கலாம்), எனப் பல வழிமுறைகளைக் கொண்டு, ஒரு புதிய முறையை உருவாக்கலாம்.

இச்செயல்பாட்டுக் குழு, இதர செயல்பாடுகளுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை அணுகி அதன் பரிந்துரைப்படி திட்டமிடும்.

தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம்
5 – வது மாடி, சந்திரலோக் பில்டிங்,
 36, ஜன்பத்; புதுதில்லி-110 001. இந்தியா.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான நீதிமுறை

குழந்தைகளின் நலம் சார்ந்து, காப்பகங்களை மாற்றியமைத்தல்:

தற்போது நம் நாட்டிலுள்ள குழந்தைகள் காப்பகங்களில் பல, குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் அக்கறை காட்டுவதில் அடிப்படை தரநிலையை சந்திப்பதில் பெரும் சவால்களை சந்திக்கின்றன.  எனினும், உரிய முறையில் செயல்பட்டால், குழந்தைகள் மற்றும் இந்த இல்லங்களின் பணியாளர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டு பண்ணமுடியும் என்பது, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகில் உள்ள ஹதியாவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.  பெண்களுக்கான தங்கும் விடுதியாக இருந்த ஒரு இல்லம், காணாமல் போன குழந்தைகள், மனதளவில் மற்றும் உடலளவில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், சட்டத்தோடு முரண்பட்டு  பழிசுமத்தப்பட்ட பெண்கள் மற்றும் காதலித்த ஆடவர்களோடு சென்று பாதிக்கப்பட்ட சட்டப்படி வயதுக்கு வராத இளம் பெண்கள் ஆகியோரை கொண்டு சேர்க்கும் இடமாக மாறிப் போயிருந்தது.

1981-ம் ஆண்டிலிருந்து, சிறைச்சாலையை ஒத்த  இந்த இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்ட பெண்களுக்கு, குறைந்தபட்ச அடிப்படை தேவைகள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.  குழந்தைகளில் பலர் இந்த சூல்நிலையிலேயே பருவவயதை அடைந்துள்ளனர்.  ஒவ்வொரு வருடமும் அதிகமான குழந்தைகள் சேர்க்கப்பட்டு, அவர்களும் இவ்வாறான வருத்தமான வாழ்வில் தள்ளப்பட்டு வந்தனர்.

எனினும், தன்னார்வத் தொண்டர்களின் முயற்சிகள் மற்றும் நீதித்துறையின் தலையீட்டினால், ஆறு மாத காலத்தில் அவர்களுடைய வாழ்க்கை பெரிதும் மேம்பட்டுள்ளது. குறைந்தபட்ச தரநிலைகள் செயல்படுத்தப்பட்டதால், கவனிக்கப்படாமல் இருந்த 60 பேரும், தங்களை அக்கறையாக கவனிக்கக்கூடிய மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தும்,  மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

2005 ஆம் ஆண்டில், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதாக ஒரு தன்னார்வ அமைப்பு கண்டுப்பிடித்த பிறகு, இந்த மாற்றங்கள் அனைத்தும் துவங்கின.  குழந்தைகள், தங்கும் காற்றோட்ட வசதி இல்லாத தனி அறைகளில், அதிக நேரம் உள்ளே அடைக்கப்பட்டிருந்தார்கள். தேவையான குடிநீர் வழங்க வசதிகள் இல்லாமலும், வழங்கப்பட்ட உணவு தரமில்லாமலும், அளவு குறைவாகவும் இருந்தது. கல்வி மற்றும் தொழிற்கல்விக்கான முயற்சிகள் மற்றும் குழந்தைகளை அவர்களுடைய குடும்பத்தில் சேர்ப்பதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.  உடல்நிலை பராமரிப்பும் மோசமாக இருந்தது மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் நலனிலும் அக்கறை செலுத்தப்படாமல் இருந்தது.

சிறுவர்கள் நீதி சட்டம் மற்றும் விதிகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் மீது அக்கறை செலுத்துவதற்கான திட்டங்கள் எதுவும்  பணியாளர்களுக்கு இல்லை.  பணியாளர்களுக்கு ஊதியமும் உரிய நேரத்திற்குள் கொடுக்கப்படவில்லை: மற்றும் குறைந்தளவு சம்பளத்துடன மிகவும் குறைவான அடிப்படைப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இந்த நிலைமைகள், ஜார்கண்ட் உயர்நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது மற்றும், விதிகளை செயல்படுத்தும் முறைகள் பற்றிய கருத்தரங்கத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. நீதித்துறையின் உதவியுடன், ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள காப்பகங்களின் நிலைமைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றிய கூட்டங்கள் நடத்தப்பட்டன. முதலமைச்சரை சந்தித்து குழந்தைகளின் தேவைகளைப் பற்றி எடுத்துக் கூறப்பட்டது.

ராஞ்சி, நம்க்குமிலுள்ள பெண்களுக்கான தங்கும் விடுதி புதுப்பிக்கப்பட்ட பிறகு, ஹதியா காப்பகத்திலிருந்த குழந்தைகள் அங்கு மாற்றப்பட்டனர்.  குறைந்தபட்ச  தரநிலைகளை கடைபிடிப்பதை நீதித்துறை மற்றும் தன்னார்வர்கள் இணைந்து உறுதி செய்தனர்.  அதிகாரிகள், மாவட்ட நீதித்துறை மற்றும் உயர்நீதிமன்றம்  ஆகியவற்றின் துணையுடன் பல குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டனர். முறையான படிப்பு தொடங்கப்பட்டு மற்றும் நடைபெற்று வருகின்ற பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்னர் இணைப்பு பாடத் தொகுதிகளுக்குள் குழந்தைகள் சேர்க்கப்பட்டார்கள். தீப்ஷிகா என்ற அரசுசார அமைப்பால் நடத்தப்படும் சிறப்பு பள்ளியில், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். மருத்துவ கவனிப்பு மற்றும் தொழிற்பயிற்சி தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டது.  தற்போது இந்த இல்லம் “நம்க்கும் பெண்கள் பணித்தகுதிக்கான காப்பகம்” என அழைக்கப்படுகிறது. குழந்தைகள் வெறுமனே இருந்து வருவதை விட இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

ஆதரவு கிடைக்கப்பெற்ற பணியாளர்கள், குழந்தைகளை நன்கு கவனிக்கும் குழுவாக தற்போது செயல்படுகிறார்கள்.  இவர்களுக்கு, இவ்வாறு தொடர்ந்து செயல்பட, அவ்வப்போது தூண்டுதல் மற்றும் ஊக்குவிப்பு தேவைப்படுகிறது.  சட்டத்தோடு முரண்பட்ட குழந்தைகளுக்கான விசாரணை முறைகளை மாற்றியமைக்கவும், சட்ட சேவைகள் அளிப்பதிலும் ஜார்கண்ட் சட்ட சேவைகள் ஆணையம் மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

குழந்தைகளின் உரிமைகளை காப்பதற்காக, அதிகாரிகளும், நீதித்துறையும் உள்ளூர் சமூகங்கங்களுடன் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்பதற்கு இந்த ஹதியா கதை ஒரு எடுத்துக்காட்டாக  விளங்குகிறது.

உடல் ரீதியான தண்டனைகளைத் தடைசெய்தல்:

குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கு, விரல் மூட்டுகளில் வலிக்கும்படி தொடர்ந்து அடித்தல், பள்ளி மைதானத்தில் ஓடவிடுதல், நீண்ட நேரம் நிற்க அல்லது முட்டியிட வைத்தல், பிரம்பால் அடித்தல், கிள்ளுதல் மற்றும் கன்னத்தில் அறைதல் போன்றவையே உகந்த முறைகள் என்று எண்ணி ஆசிரியர்கள் செயல்பட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் இத்தகைய முறைகளை ஏற்றுக்கொள்ள முடிகிறதா? இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறது புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR). குழந்தைகளுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகளைத் தடுப்பதற்காக 2000ம் ஆண்டில் உச்சநீதி மன்றம் வழங்கிய அரசு ஆணையும் இதைத்தான் கூறுகிறது. இது ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமான, பயமற்ற, தன்மானத்தைப் பாதிக்காத முறையில் கல்வி கற்க ஏற்ற சூழலை மாநில அரசுகள் உருவாக்க வழிகாட்டுகிறது.

ஆனால் ஒழுக்க நடவடிக்கை என்ற போர்வையால் குழந்தைகளின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. இராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் அடித்த இரண்டு நாட்களுக்குப்பின் மாணவன் இறந்துள்ளான். ஆந்திராவில் ஒரு பள்ளியில், ஆசிரியர் ஒருவர் தலைமை ஆசிரியர் அனுமதியுடன் மாணவருக்கு எலெக்ட்ரிக் ஷாக் அளித்ததாக புகார்கள் எழுந்தன. இத்தகைய செயல்பாடுகள் ஆங்காங்கே பரவலாக நடைபெறுகின்றன என்றும் இவை வன்முறை கலாச்சாரத்தை வெளிக்கொணருகின்ற அறிகுறிகளே என்றும் NCPCR ஆணையம் எண்ணுகிறது. மேலும் இவை குழந்தைகளின் உரிமைகளை முடக்கி அவர்களை உணர்ச்சியற்றவர்களாக்கும்.

இத்தகைய பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டிய அவசியத்தை உணர்ந்து    NCPCR அமைப்பு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான கடும் தண்டனைகளைத் தடுக்க தேவையான வழிமுறைகளை விளக்கக்கூடிய சுற்றறிக்கையை அனைத்து மாநில தலைமை செயலருக்கும் அனுப்பியது. கல்வி இலாகாக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் அறிவுறுத்தியது.

அனைத்து வகை உடல் ரீதியான தண்டனைகளும் மனித உரிமைகளின் அடிப்படை மீறல்களே. குழந்தைகளின் உரிமைகளுக்குப் பாதிப்பு அளிக்கக்கூடிய செயலான கன்னத்தில் அறைதல் என்பது வலிதாங்கமுடியாத காயத்திற்குச் சமம். இத்தகைய தண்டனைகளை ‘சிறிய விசயம்/செயல்’ என்று எண்ணி பொறுத்துக்கொள்ளவோ மன்னிக்கவோ முடியாது.ஏனென்றால் இச்செயல்பாடுகள் ஒட்டுமொத்த அத்துமீறலுக்கு வழிவகுத்துவிடும். இவைகள் அனைத்தும் சட்டப்படி அனுமதிக்கப்படாதவை.

பயத்தினால் குழந்தைகள்  இத்தகைய கொடூரச் செயல்களை எதிர்த்து கேள்வி கேட்காமல்  அமைதியாக இருந்து அடிபணிகின்றன. சில சமயங்களில் குழந்தைகள் தங்களுடைய வெறுப்புணர்வை அவர்களின் நடவடிக்கைகளில்  வெளிப்படுத்தினாலும் அவை கண்டுகொள்ளப்படாத காரணத்தால் அவர்கள் மீது தொடர்ந்து தண்டனைகள் திணிக்கப்படுகின்றன. அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் ஒரு புகார் பெட்டி வைக்க வேண்டும். அப்பெட்டியில் யார் மீது புகார் சொல்ல குழந்தைகள் விரும்புகிறார்களோ அவர்கள் குறித்து புகார்களை போடலாம். அந்த புகார்களின் அடிப்படையில், புகார் அளிப்பவர் யார் என்று தெரியாமல் இருந்தால்கூட அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் இப்பிரச்சனைக்கு முடிவு கட்டலாம். எனவே  அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து NCPCR ஆணையம் பரிந்துரைத்தது..

விரல் மூட்டுகளில் வலிக்கும்படி தொடர்ந்து அடித்தல், பள்ளி மைதானத்தில் ஓடவிடுதல், நீண்ட நேரம் நிற்க அல்லது முட்டியிட வைத்தல், நாற்காலி அமைப்பைப் போன்று வெகுநேரம் நிற்கவைத்தல், பிரம்பால் அடித்தல், கிள்ளுதல் மற்றும் கன்னத்தில் அறைதல் போன்றவற்றையெல்லாம் உடல் ரீதியான கொடுந்தண்டனைகளாக  NCPCR ஆணையம் வரையறுத்துள்ளது. வகுப்பறையில் மாணவனை மட்டும் அடைத்து வைத்து எலக்ட்ரிக் ஷாக் வைத்து துன்புறுத்துதல் அவர்களை அதிக அளவு பாதிக்கும். சிறுவர்களைச் சட்டையைக் கழற்றி நிற்க வைத்தல் முதலிய  பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆட்படுத்துவது  உள்ளிட்ட இதர செயல்களினால் மாணவர்கள் இழிவு, உடல் மற்றும் மனம் பாதிக்கும்படியான வலிகள்,அவமானம்,கேலி போன்றவற்றுக்கு உள்ளாகின்றனர். இச்செயல்களை  ஆணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இப்பிரச்சனைகளுக்கு குழந்தைகள் ஆளாகாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள் & பள்ளி நிர்வாகத்தையே சாரும்.

இத்தகைய தண்டனைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படாமல் இருக்க கல்வித்துறை கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  • அடித்து துன்புறுத்துவதை தட்டிக்கேட்பதற்கும், அதை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் உரிமை உண்டு என்பதை கண்காட்சிகள் மற்றும் விளம்பரங்கள் மூலமாக மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
  • அனைத்துப் பள்ளிக்கூடங்கள், விடுதிகள், காப்பகங்கள்,சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகள் மற்றும் பொது நிறுவனங்களில் குழந்தைகள் தங்களது குறைகளை எடுத்துச் சொல்வதற்கு ஒரு பொதுமன்ற அமைப்பு இருக்க வேண்டும்.
  • அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் புகார் அளிப்பதற்கு ஒரு புகார் பெட்டி வைக்க வேண்டும்
  • பெற்றோர்-ஆசிரியர் கழகம் , பள்ளி கல்விக்குழு ,கிராம கல்விக்குழு ஆகிய அமைப்புகள் மாதாந்திர கூட்டங்களை நடத்தி புகார்களை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இது போன்ற புகார்களின் மீது காலம் கடத்தாமல் உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் (PTA) நடவடிக்கை எடுப்பதற்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும்.
  • பெற்றோர்களும், குழந்தைகளும் இத்தகைய தண்டனைகளைப்பற்றி பயமின்றி பேசுவதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இது குழந்தைகளின் பள்ளிக்கூட வாழ்க்கையை பாதிக்கும்.
  • மாநில, மாவட்ட, பஞ்சாயத்து அளவில் செயல்படும் கல்வித்துறை குழுக்கள் இதுபோன்ற புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கைகளைக் கண்காணிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டால் பள்ளிக்கு செல்தல் ஒரு சுகமான அனுபவமே. இது சாத்தியமாக ஆசிரியர்கள் அனைவரும் தண்டனைகளைத் தள்ளிவைத்துவிட்டு அன்பான முறையில் குழந்தைகளை அணுக வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் உரிமைகளைச் சுதந்திரமாக அனுபவிக்க வழிவகை செய்தல்

கல்வி நிறுவனங்களைப் பாதுகாப்பதை விடுத்து, அவை சார்ந்த குழந்தைகளைப் பாதுகாப்பதில் அதிக கவனமும் முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும் என நிறைய பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் அவர்களின் உரிமைகளை எவ்வித பயமும் இல்லாமல் அனுபவிக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் ஆகியோரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

பரிந்துரைகள்:

  • ஒவ்வொரு நிறுவனமும் (பள்ளி/விடுதி/குழந்தைகள் காப்பகம்), அதில் பயிலும்/தங்கும் குழந்தைகளின் நலமான வாழ்வுக்கு பொறுப்பேற்க வேண்டும். காவல் நிலையத்திலும் சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளுக்கு காவல் அதிகாரிதான் பொறுப்பேற்கிறார். அதைப்போலவே, கல்வி நிறுவனத்தில் ஏற்படும் விபத்து/உடல்நிலை பாதிப்பு/தாக்குதல்/இறப்பு போன்றவற்றுக்கும் நிறுவனமே பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • நிறுவன வளாகத்தில் குழந்தைகளுக்கு இறப்பு/விபத்து ஏற்பட்டால் அதற்குரிய இழப்பீட்டுத் தொகை மற்றும் மருத்துவமனை செலவுகளையும் நிறுவன நிர்வாகமே ஏற்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறை/அசம்பாவிதங்களுக்கு சம்பந்தப்பட்ட கல்வித்துறை/வாரியமும் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்ய வேண்டும். விசாரணையில் பெற்றோர் ஆசிரியர் கழகமும்(PTA) இணைந்து செயல்பட வேண்டும்.
  • குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பெற்றோர்கள் கொடுத்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டாலும் (வாபஸ்) அரசாங்கம் தொடர்ந்து விசாரணை செய்து ஆய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • குழந்தைகள் சாதி மத பாகுபாட்டால் தனக்கு பிரச்சனை ஏற்பட்டதாகத் தகவல் தெரிவித்தால், SC/ST (POA) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
  • உடல் ரீதியான தண்டனைகளுக்கு மாணவ, மாணவிகள் உள்ளாக்கப்பட்டால்,   கல்வித்துறை/வாரியம் அது குறித்து ஆய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • குழந்தைகளின் நலம் பாதுகாக்கப்பட ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலவாரிய குழுக்களும் ஆதரிக்கப்பட்டு திறம்படுத்தப்பட வேண்டும்.
  • குழந்தைகள் மரணம்/தற்கொலை (தற்கொலை முயற்சி)/மருத்துவமனை சேர்க்கை சம்பந்தப்பட்ட விசயங்களாக இருப்பின், நிறுவனத்தில் நிகழும் ஒவ்வொரு தற்கொலை வழக்குகளும் நிர்வாகத்தினால் ஏற்பட்டதாகவே (உடந்தையாக இருத்தல்) கருதப்படும். எனவே நிறுவன நிர்வாகமே இதற்கு பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும்.
  • சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் பிற தற்கொலைமுயற்சி வழக்குகளைப்போல குழந்தைகளின் தற்கொலை முயற்சிகளைக் குற்றம் என்று பதிவு செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது குழந்தைகளை இருமடங்காக பாதிக்கும்.
  • தற்கொலை/பாலியல் தொல்லைகள்/மருத்துவமனை சேர்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆசிரியர்/ஆசிரியர்களின் செயல்பாடுகள் காரணமாக இருப்பின், அவர்களை விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்தல் வேண்டும்.
  • மர்மமான அல்லது சந்தேகத்திற்கு இடமளிக்கும் முறையில் குழந்தை மருத்துவமனையில் விபத்து/உடல்நிலை பாதிப்பு போன்றவற்றுக்காக சேர்க்கப்பட்டிருந்தால், மருத்துவமனை நிர்வாகம் அது குறித்து மருத்துவ-சட்ட வழக்கைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் குழந்தையின் வாக்கு மூலத்தையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
  • விடுதியில் உள்ள குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கும் ஒவ்வொரு சமயத்திலும் என்னென்ன செய்யப்பட்டன என்ற விபரங்களை அறிந்து கொள்ள கல்வித்துறை/SWJD வழி முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற முறை (செலவு விபரம் உட்பட), பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று குழந்தையை அழைத்துக்கொண்டு வீடு திரும்புவதற்கான செலவுகளுக்கு பொருளாதார உதவி முதலியன.

தனியார் நிறுவனங்கள்:

  • தனியார் குழந்தைகள் காப்பகம்/கல்வி நிறுவனங்களுக்கு உரிமம்(லைசென்ஸ்) வழங்கப்படும் முறைகள், அவைகளுக்கான விதிமுறைகள், கண்காணிப்பு வழிமுறைகள் குறித்து ஆராய ஒரு குழுவை அரசு நியமிக்க வேண்டும்.

 

Share Social

Leave a Reply

WhatsApp chat