உலகநாதர் இயற்றிய உலகநீதி

பாடல் : 1

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்.
போகாத இடந்தனிலே போக வேண்டாம்.
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.

விளக்கம்:

கல்வி பயிலாமல், கற்றதை மனனப்பயிற்சி செய்யாமல் இருக்கக் கூடாது.
பிறர்மீது பழி கூறக்கூடாது. அம்மாவை மறக்கக்கூடாது. தீயவர்களோடு சேரக்கூடாது. தகாத இடங்களுக்கு செல்லக்கூடாது. ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிக் குறை கூறக்கூடாது.

பாடல் : 2

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்.
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்.
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்.
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்.

விளக்கம்:

தெரிந்தே பொய் கூறக்கூடாது.
நடக்காது என்று தெரிந்த காரியத்தை நிலை நிறுத்த முயலக் கூடாது.
பாம்போடு விளையாடக்கூடாது.
பண்பு இல்லாரோடு பழகக்கூடாது.
தனியாக ஒருவரும் இல்லாத வழியில் செல்லக் கூடாது.
பிறர் கெடுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது.

பாடல் : 3

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்.
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்.
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்.
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்.

விளக்கம்:

மனம் விரும்புவதையெல்லாம் செய்யக் கூடாது.
பகைவனை உறவென்று கொள்ளக் கூடாது.
பொருளைத் தேடிச்சேர்த்து, பின் அதை அனுபவிக்காமல் பாதுகாக்கக் கூடாது.
தர்மம் செய்யாமல் இருக்கக் கூடாது.
துன்பத்தில் முடியும் கோபத்தை கொள்ளக்கூடாது.
கோபத்தோடு இருப்பவரிடம் செல்லக்கூடாது.

பாடல் : 4

குற்றம்ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்.
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்.
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்.
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்.
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்.
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.

விளக்கம்:

பிறரிடம் எப்போதும் குற்றங்களையேப் பார்க்கக் கூடாது.
கொலை, திருட்டு செய்பவரோடு சேரக்கூடாது.
படித்தவர்களை இகழக்கூடாது.
பிறன் மனைவியை நினைக்கக் கூடாது.
ஆட்சிசெய்பவர்களோடு வாதம் செய்யக் கூடாது.
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது.

பாடல் : 5

வாழாமல் பெண்ணை வைத்துத்திரிய வேண்டாம்.
மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்.
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்.
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்.
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்.
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

விளக்கம்:

மனையாளோடு வாழாமல் பிறபெண்களைத் தேடி அலையக் கூடாது.
மனைவியைக் குறை கூறக்கூடாது.
தீய பழக்கங்களில் விழுந்து விடக் கூடாது.
கடும்போரில் பின்வாங்கி ஓடக்கூடாது.
கீழானவர்களோடு சேரக்கூடாது.
அவர்களைக் குறை கூறக் கூடாது.

பாடல் : 6

வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்.
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்.
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்.
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்.
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்.
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்.

விளக்கம்:

பிறரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர் பேச்சைக் கேட்க வேண்டாம்.
நம்மை மதிக்காவர்கள் இல்லத்திற்கு செல்லக் கூடாது.
அனுபவஸ்தர்களான பெரியோரின் அறிவுரைகளை மறக்கக் கூடாது. எதற்கெடுத்தாலும் கோபப்படுபவரோடு சேரக் கூடாது.
கல்வியறிவு தந்த ஆசிரியர் சம்பளத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கக் கூடாது.
திருடர்களோடு கூட்டு சேரக்கூடாது.

பாடல் : 7

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்.
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்.
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்.
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்.
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்.

விளக்கம்:

எண்ணித் திட்டமிடாமல் காரியங்களை செய்யக் கூடாது.
நம் நஷ்டங்களை பிறரிடம் கூறக்கூடாது.
போர்க்களத்திற்கு வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது.
புறம்போக்கு நிலத்தில் வசிக்கக்கூடாது.
இரண்டாம் மணம் புரியக் கூடாது.
எளியார் என்று பகைமை கொள்ளக் கூடாது.

பாடல் : 8

சேராத இடந்தனிலே சேர வேண்டாம்.
செய்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்.
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்.
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்.
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்.
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்.

விளக்கம்:

தகாத இடங்களுக்குப் போகக் கூடாது.
ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது.
எல்லாரையும் பற்றி கோள் சொல்லிக் கொண்டு திரியக் கூடாது. நமக்கு வேண்டியவர்களை அலட்சியமாய்ப் பேசக்கூடாது.
பெருமை தரும் கார்யங்களைத் தவிர்க்கக் கூடாது.
கெட்ட செயல்களுக்குத் துணை போகக் கூடாது.

பாடல் : 9

மண்நின்று மண்ஓரம் சொல்ல வேண்டாம்.
மனம்சலித்து சிலுக்கிட்டு திரிய வேண்டாம்.
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்.
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்.
புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம்.
புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்.

விளக்கம்:

நிலத்திலேயே வாழ்ந்து கொண்டு நிலத்தகராறில் ஒருசார்பாகத் தீர்ப்பு சொல்லக் கூடாது.
மனம் சலித்து எவரோடும் சண்டை செய்யக் கூடாது.
நம் துயரை எவரிடமும் அழுது தெரிவிக்கக் கூடாது.
பார்க்காத ஒன்றைப் பற்றிப் பெரிதாகக் கற்பனை செய்து கூறக்கூடாது.
பிறர் மனம் புண்படப் பேசக்கூடாது.
கோள் சொல்லிக்கொண்டு அலைபவரோடு சேரக்கூடாது.

பாடல் : 10

மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்.
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்.
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்.
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
இறந்தாலும் பொய்தன்னை சொல்ல வேண்டாம்.
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்.

விளக்கம்:

வீண்பேச்சு பேசி வலுச்சண்டை தேடுபவரோடு சேரக்கூடாது.
பொய் சாட்சி சொல்லக்கூடாது.
தந்திரமாய்ப் பேசிக்கலகமிடக் கூடாது.
தெய்வத்தை மறக்கக்கூடாது.
இறக்கும் நிலை வந்தாலும் பொய் கூறக்கூடாது.
நம்மை ஏசிய உற்றாரிடம் உதவி கேட்கக்கூடாது.

பாடல் : 11

அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்.
அது ஏது இங்கு என்னில் நீசொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் றானே.

விளக்கம்:

ஐந்து நபர்களுடைய கூலியைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது. வண்ணான், சவரத் தொழில் செய்பவன், கலைகளைக் கற்றுக் கொடுத்த வாத்தியார், பிரசவம் பார்த்த மருத்துவச்சி, பெருநோயைக் குணப்படுத்திய மருத்துவன் இவர்களின் கூலியைக் கொடுக்காதவர்களை எமதர்மன் என்ன பாடு படுத்துவானோ?

பாடல் : 12

கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்.
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்.
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்.
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்.
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்.
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்.

விளக்கம்:

ஒரு குடும்பத்தைப் பிளவு செய்து கெடுக்கக் கூடாது.
கண்ணில் தெரியுமாறு கொண்டை மேல் பூ வைத்துக் கொள்ளக்கூடாது.
அவதூறு சொல்வதே வேலையாகக் கொள்ளக் கூடாது.
தீயவர் நட்பு கூடாது. தெய்வத்தை இகழக்கூடாது.
பெரியோரை வெறுக்கக் கூடாது.

Share Social

Leave a Reply

WhatsApp chat